செவ்வாய், 3 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 33


வாழ்க்கையில் அனைத்தும் நல்ல வண்ணம் நடந்து கொண்டிருக்கிறது. இல்லத்தின் நடப்புகள், அலுவல், சுற்றம், நட்பு என்று நம்மைச் சுற்றியுள்ள நடப்புகள் சுமூகமான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் வேளையில் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் வெள்ளம் வந்தாற்போல் திடீரென எதிர்பாராவிதமாக துன்பம் நேருகிறது. அதனை எவ்வாறு நாம் சந்திப்போம்? நாம் அதனை ஏற்போமா? ஏற்றால் எவ்வாறு ஏற்போம்? இவ்வினாக்களுக்கு விடை தரும் வகையில் அமைந்துள்ளது இந்த நாலடியார்ப் பாடல்.


எதிர்பாராத விபத்தோ துன்பமோ நேர்கையில் அறிவில் குறைந்த பேதை மாந்தர் அத்துன்பத்தைக் கண்டு உழன்று, பெரு மூச்சு விட்டு, மிகவும் வருத்தப்பட்டு சோர்ந்து நிற்பார். இதனையே அறிவு மிக்க பெரியோர்கள் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் இத்துன்பம் என்பது நாம் மும்பு செய்த வினையின் பயன் என்று உணர்ந்து, அந்த துன்பத்தில் உழலாது அடுத்து என்ன செய்வது என்று எண்ணி தங்கள் வாழ்வைத் தொடர்வர்.

பாடல்:
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்தனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார்.

பொருளறிந்து படிக்க பதம் பிரித்த பாடல்:

வினைப் பயன் வந்தக்கால், வெய்ய உயிரா,
மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்து, அதனைத்
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்து ஒருவுவார்.

அருஞ்சொற்பொருள்:

வெய்ய உயிரா - கடுமையாக மூச்சு விட்டு
இகந்து ஒருவுவார் - விட்டு விலகுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக