செவ்வாய், 3 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 34

இரு சக்கர வண்டியில் வேகமாக சென்ற அவள் வயல் வெளியின் பசுமை பார்த்து சற்று நின்றாள். இதமான காற்று இனிமையாகத்  தழுவ அக்கரும்புத் தோட்டத்தின் அழகில் மயங்கி சிந்தனையில் ஆழ்ந்தாள். கரும்பின் வாழ்க்கைச் சக்கரம் அவள் சிந்தனையின் மையமாக அமைந்தது.   நன்றாக வளர்ந்தபின் கரும்பு ஆலைக்கு எடுத்துச் செல்லப்படும். தோகை கொய்த பின் அக்கரும்பின் சாறு பிழியப் படும். சாறு இழந்த கரும்பு சக்கையாக மாற அச்சக்கை அப்புறப் படுத்தப் படும். அந்த ஆலையின் வழி பிழியப்பட்ட சாறு வெல்லமாக, சக்கரையாக, சீனியாக என்று பலவிதமான பொருட்களாக மக்களுக்குப் பயன்படும்.


இதனைப் பார்த்துதானோ நம் நாலடியார்ப் புலவர் உவமையாக இதனைக் கையாண்டுள்ளார் என்று எண்ணிய அவள் மனதில் அந்தப் பாடலின் பொருள் உலாவியது. "பெறுவதற்கு அரிதான இந்த உடலைப் பெற்ற நாம், கரும்பு எவ்வாறு பல்லோருக்கும் பயன்பெறும் கரும்புச்சாற்றை தந்துதவியதோ, அது போல நம் உடலின் இயக்கம் இருக்கும் பொழுது பயனுள்ள நல்ல அறச் செயல்களை செய்ய வேண்டும். ஏன் என்றால், சாறு இழந்த கரும்பு எவ்வாறு சக்கையாக தூக்கி எறியப்பட்டதோ அதே போல் நம் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் உடல் அப்புறப் படுத்தப் படும். அதனால் உயிர் இருந்து உடல் இயக்கம் இருக்கும் பொழுது அறச் செயல்கள் செய்வோமாக". நல்லதொரு நாலடியர்ப் பாடலை நினைவு படுத்திய கரும்புத் தோட்டத்திற்கு நன்றி சொல்லித் துவக்கினாள் தந்து இருசக்கர வண்டியின் இயக்கத்தை. 

பாடல்:

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.

பதம் பிரித்த பாடல்:

அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்,
பெரும் பயனும் ஆற்றவே கொள்க!-கரும்பு ஊர்ந்த
சாறுபோல் சாலவும் பின் உதவி, மற்று அதன்
கோதுபோல் போகும், உடம்பு!

அருஞ்சொற்பொருள்: 

பெற்ற பயத்தால் - பெற்ற ஆக்கம் கொண்டு 
ஆற்றவே - முடிந்தவரை 
ஊர்ந்த - பிழிந்து எடுத்த 
சாலவும் - மிகவும் 
கோது - சக்கை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக