செவ்வாய், 24 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 50

குற்றம் என்பதனை எவ்வாறு வரையறுப்பது? ஒருவரின் செயலால் மற்றவருக்கு தீங்கு நேருமானால் அந்தச் செயல் குற்றம் எனப்படுமா? அல்லது அந்தச் செயலுக்கு முன்னதாகவே தோன்றும் எண்ணங்கள், சிந்தனைகள் குற்றங்கள் எனப்படுமா? நம் தமிழ் இலக்கியக் களஞ்சியத்தில் இவ்வினாக்களுக்கு விடையளிக்கப் பல்வேறு பாடல்கள் இருக்கின்றன. ஒருவர் மனத்தளவில் மாசு இல்லாதவராக இருப்பது தான் அறத்தின் வழி நிற்பது  என்கிறார் வள்ளுவர். இவ்வாறு மனம் சார்ந்த ஒரு குற்றத்தைப் பற்றியும் அந்த குற்றம் எவ்வாறு ஒருவரிடமிருந்து நீங்கும் என்பதையும், அவ்வாறு குற்றம் நீங்கியவர் நிலை பற்றியும் இந்த நாலடியார்ப் பாடல் விளக்குகிறது.



ஒருவர் தமது உடம்பின் மேல் ஆசை வைத்து, அறச் செயல்களை நினையாது, உடலால் உண்டாகும்  இன்பங்களை மட்டும் நினைத்து துய்ப்பார்கள் என்றால் அவர்கள் குற்றம் புரிந்தவர் ஆவர். அவர்கள் எப்போது குற்றம் நீங்குவார்கள்?  இவ்வுலகில் வாழ்ந்து மடிந்தவரின் வெள்ளை தலை ஓடுகளால் இந்த உடலின் நிலையாமையினை உணர்த்துப் படும் பொழுது அவர்கள அந்த குற்றத்தில் இருந்து விடுபடுவர். அவ்வாறு விடுபட்ட மாந்தர், “இவ்வுடலின் நிலை நிலையாமை ஒன்று தான்” என்று அறிந்து தங்கள் உடலைப் பெரிதாகப் பொருட்படுத்தாது அறச் செயல்களில் ஈடுபடுவார்கள்.


பாடல்:

உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.

பதம் பிரித்த பாடல்

உயிர் போயார் வெண் தலை உட்கச் சிரித்து,
செயிர் தீர்க்கும், செம்மாப்பவரை; செயிர் தீர்ந்தார்
கண்டு, 'இற்று, இதன் வண்ணம்' என்பதனால், தம்மை ஓர்
பண்டத்துள் வைப்பது இலர்.

அருஞ்சொற்பொருள்

செயிர் - சுற்றம்
செம்மப்பவரை - இன்புறுகின்றவரை

இற்று - இத்தகையது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக