புதன், 4 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 35

சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஆடிக்கொண்டிருந்தார் அவர். இருக்கப்போவது இன்னும் சில நாட்களா, மாதங்களா இல்லை வருடங்களா என்பது தெரியாது. ஆனால் அவர் அதனைப் பற்றி யோசிக்கவில்லை. தாம் கடந்து வந்த பாதை, பள்ளிப் பருவம், இளமைப் பருவம், இல்லற வாழ்வு என்று நடந்த அனைத்தையும் அசை போட்டுக் கொண்டிருந்தார். தனக்கு உதவிய நண்பர்கள், உறவினர்கள், தன்னுடைய வாழ்வின் தாழ்வுகள், ஏற்றங்கள், என்று அனைத்து நிகழ்வுகளும் கண் முன்னே காட்சியாய் ஓடுவது போல் அவரின் எண்ணங்களில் வலம் வந்தன. வாழ்ந்த வாழ்வு நிறைவாக உள்ளது, வரப்போகும் நிகழ்வான வாழ்வின் இறுதி நாளைப் பற்றி எந்த வித கவலையும் இன்றி இருப்பதை நினைத்து அதற்கான காரணத்தை அலசிக் கொண்டிருந்தார். தன்னுடன் பயணித்த சகமனிதர்களுக்கு தன்னால் இயன்ற நற்செயல்கள் செய்து அவர்களின் வாழ்வில் சிறு அளவில் பங்கேற்றது தான் இவ்வாறான மனப்பாங்கிற்குக் காரணம் என்று முடிவுக்கு வந்தார். அவ்வாறு நற்செயல்கள் செய்ய வில்லை என்றால் இன்று இவ்வாழ்வைப் பற்றிய நிறைவான எண்ணம் வந்திருக்காது என்று முடிவுக்கு வந்தபோது அவருக்கு அந்த நாலடியாப் பாடல் நினைவில் வந்தது.


அது ஒரு சர்க்கரை ஆலை. அதிகாலை வேளையில் கரும்புகள் ஆட்டப்பட்டு அதிலிருந்து சாறு எடுக்கப்பட்டது. அந்தச் சாறு வெல்லக் கட்டியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு மீதம் இருந்த கரும்பின் சக்கை நெருப்பில் இடப்பட்டன. இதனைக் கண்டவர்கள் அச்சக்கைகள் தீயிலிடப்பட்டதைக் குறித்து மனம் வருந்தவில்லை. ஏன் என்றால் சக்கையாவதற்கு முன் கரும்புகளாய் இருந்த இச்சக்கைகள் தமது சாற்றை வழங்கி வெல்லக்கட்டி மற்றும் சக்கரை உண்டாக்க பயன் பட்டன. இக்கரும்புகள் போல் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர் இறுதி நாள் வரும்பொழுது வருத்தப் பட மாட்டார்கள். அதே போன்று அவரது உறவினர்கள் இழப்பை நினைத்து வருத்தப்பட்டாலும் அவர் வாழ்ந்த வாழ்வின் பயன்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டு அவரது வாழ்வினைக் கொண்டாடுவர்.

பாடல்:

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.

பதம் பிரித்த பாடல்:

கரும்பு ஆட்டி, கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார்;-
வருந்தி உடம்பின் பயன் கொண்டார், கூற்றம்
வருங்கால் பரிவது இலர்.\

அருஞ்சொற்பொருள்:

வேம்கால் - வேகும் பொழுது
உழவார் - வருந்த மாட்டார்
பரிவது - இரங்குவது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக