சனி, 18 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 58

அன்று அவனுக்கு பனிச் சுமை அதிகமாக இருந்தது. அதன் காரணமாக மன அழுத்தம் அவனுள் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த நிகழ்வு நடந்தது. அவனுடன் வேலை பார்க்கும் சக ஊழியன் தன்னைப் பற்றி இகழ்வாகப் பேசினான். அந்தப் பேச்சினைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனும் கோபத்துடன் பேசினான். அதன் பின் சில நிமிடங்கள் கழித்து, “அட என்ன இப்படிப் பேசிவிட்டோமே?” என்று மனம் வருந்தலானான். அவனது இடத்தில் துறவு மேற்கொண்ட ஒருவர் இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பார்? சிந்தனையில் மூழ்க, அவனுக்கு விடையளிக்கும் வண்ணம் அந்த நாலடியார்ப் பாடல் நினைவில் வந்தது.



பற்றுகள் அனைத்தையும் விட்டு விட்டு துறவு மேற்கொண்ட பெரியரவகள், தங்களை யாராவது இகழ்ந்து பேசினால், அந்த இகழ்ச்சியினைப் பொறுத்துக் கொள்வர். அதோடு நின்று விடாமல், அட, நம்மை இகழ்ந்து பேசிய காரணத்தால் இவர்கள் நரகம் சென்று துன்பப் படப் போகின்றார்களே என்று அவர்களுக்கு இரக்கம் காட்டி அன்பு செலுத்துவர். கோபப் படாமல் இருப்பதோடு அன்பும் இரக்கமும் காட்டுதல் துறவு மேற்கொண்ட சான்றோர்களின் பண்பு ஆகும்.

பாடல்:
தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.

பதம் பிரித்த பாடல்:
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி, 'மற்று
எம்மை இகழ்ந்த வினைப் பயத்தான், உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்!' என்று
பரிவதூஉம், சான்றோர் கடன்.


அருஞ்சொற்பொருள்

எரிவாய் நிரயத்து - நரகத்து
பரிவதூஉம் - இரங்குவதுவும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக