ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 59

துறவு மேற்கொள்பவர் யார்? ஆசைகளைத் துறந்தவர் துறவு மேற்கொள்பவரா ? அனைவரிடத்தும் அன்பு காட்டுபவர் துறவு மேற்கொள்பவரா? ஆசைகளைத் துறந்து, துறவு மேற்கொண்ட பின்னர், ஒருவர் துறவினை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும்?  இவ்வகை வினாக்களுக்கு விடை பகர வருகின்றது இப்பாடல்.




ஒருவர் துறவு வழி மேற்கொண்ட பின்னாலும், அவருடைய ஐந்து புலன்களின் வழி நுகரப்படும் செயல்களினால், அவருடைய ஆசைகள் தூண்டிவிடப்படும். அவ்வாறு தூன்டத்தல் உண்டாகும் பொழுது தனது மனதினை அலைய்பாய விடாமல், அதனை ஒருவழிப் படுத்தி, உடம்பு, கண், வாய் (நாக்கு), மூக்கு, காது என்ற ஐந்து புலன்களினால் உண்டாகும் கட்டற்ற ஆசைகளைக் கட்டுப்படுத்தி திகழ்பவரே துறவு மேற்கொள்பவர் ஆவார். அவ்வாறு துறவு மேற்கொள்பவர் வீடு பேறு, அதாவது முக்திநிலை, அடைபவர் ஆவர்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”

என்ற திருக்குறளும் இதனைத்தான் குறிப்பிட்டு விளக்குகிறது.



பாடல்:

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்

பதம் பிரித்த பாடல்:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பேர் பெற்ற
ஐ வாய வேட்கை அவாவினை, கைவாய்,
கலங்காமல் காத்து, உய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.

அருஞ்சொற்பொருள்:

கைவாய் - ஒழுக்கம் மிகுந்த வழி
விலங்காது - தவறாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக